Monday, December 27, 2010

தென்னகத்தின் திரிவேனி சங்கமும் திரிமூர்திகளும்- திருமுக்கூடல்

திருமுக்கூடல்

திரிவேனி சங்கமம், இது வட இந்தியாவின் அலகாபாத் நகரில் அமைந்துள்ள ஒரு புண்ணிய க்ஷேத்திரம். இந்தியாவின் முக்கிய புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கையும் யமுனையும் சரஸ்வதி நதியுடன் கலக்கும் இடம். கங்கையும் யமுனையும் கலப்பது கண்களுக்கு தெரிந்தாலும் சரஸ்வதி நதி கண்களுக்கு தெரியாது. சரஸ்வதி நதி உள் முகமாகவே சங்கமிப்பதாக நம்பிக்கை.

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களின் ஒன்றான காஞ்சி மாநகரின் அருகே அமைந்திருக்கும் கிராமம் திருமுக்கூடல். செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாலாஜபாதிற்கு சில கிலோமீட்டர்கள் முன் அமைந்துள்ள பழைய சீவரம் அருகே அமைந்துள்ளது இந்த திருமுக்கூடல். திருமுக்கூடல் என்ற பெயரிலேயே நமக்கு விளங்குவது இங்கே ஏதோ மூன்று விஷயங்கள்
கூடுகின்றன என்பது.


ஆலய முகப்பு

 மண்டபமும் கொடிமரமும்
ஆம் இங்கே கூடுவது ”பாலாறும்” அதன் கிளை நதிகளான ”செய்யாறும்” ”வேகவதியும்”. வட திரிவேனி சங்கமம் போல் இல்லாமல் இங்கே மூன்று நதிளும் கண்களுக்கு தெரிவது சிறப்பு. இதை தவிர இன்னொறு முக்கூடலும் இங்கே சிறப்பு. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் முக்கூடல்.

இந்த திருமுக்கூடல் கிராமத்தின் வெளியே ஆற்றின் கரையில் இந்திய தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் அமைந்திருப்பது அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோவில். திருமால் நின்ற நிலையில் சங்கு சக்கரங்களோடு சுமார் 7-8 அடிகள் உயரத்தில் மார்கண்டேயரும் பூமாதேவியும் மண்டியிட்டு வணங்கி இருக்க திருக்குடந்தை அருகில் அமைந்துள்ள ஒப்பிலிஅப்பனை நினைவுபடுத்தும் தோற்றத்தில் அருள் பொங்க அமைந்துள்ளார்.
 ஆலய விமானம்


ஆலய சுவர்களில் கல்வெட்டுகள்

இந்த பெருமாள் மார்கண்டேயருக்கு ரங்கநாதராக, பூமாதேவிக்கு கண்ணனாக, தொண்டமான் சக்கரவர்த்திக்கு திருப்பதி வெங்கடேசராகவும் காட்சி கொடுத்தாராம். தொண்டமான் சக்கரவர்த்தி திருப்பதி பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டு தனது அரசை மகனிடம் தந்துவிட்டு, திருப்பதி செல்ல நினைக்கிறார். ஆனல் பெருமாள் அவரது கனவில் தோன்றி நீ அவ்வாறு செய்ய வேண்டாம் உன் ராஜ்ஜியத்தின் மேல் படையெடுப்பு நடக்க போகிறது ஆதலால் நீ உன் மகனுடன் சேர்ந்து போரிட்டு வென்று பிறகு இங்கு வருவாய் என சொல்கிறார்.

தொண்டமான் சக்கரவர்த்தியோ பெருமாளே நீ தான் எனக்கு எல்லம் ஆதலால் நான் உன்னிடமே வருவேன் என புறப்படுகிறார், தன் பக்தனை காக்கும் பொறுட்டு பெருமாள் தனது சங்கு சக்கரங்களை அனுப்பி எதிரிகள் படையெடுப்பை முறியடிக்கிறார். பக்த்தனுக்காக அனுப்பப்பட்ட திருப்பதி வெங்கடேசனின் சங்கு சக்கரங்களும் திருமுக்கூடலிலேயே தங்கிவிட்டன. திருமலைக்கு வந்த தொண்டமானை திருமுக்கூடலுக்கு சென்றால் அங்கே மோட்சம் அளிப்பதாக செல்கிறார் திருமால்.
ஆலயத்தை சுற்றி

திருமுக்கூடலுக்கு வந்த தொண்டமானுக்கு அதுவரை ரங்கநாதராக சயன கோலத்தில் காட்சி அளித்துகொண்டிருந்த பெருமாள் நின்ற வன்னம் வெங்கடேச பெருமாளாக காட்சியளித்தார். இதை கண்டு நெகிழ்ந்து போன தொண்டமான் பெருமாள ஆரத்தழுவிகொண்டு அப்பனே வெங்கடேசா என மகிழ்ந்தார். இதனால் இப்பெருமாளுக்கு அப்பன் வெங்கடேச பெருமாள் என பெயர் வந்தது.

பாலாறூம் தூரத்தி தெரிகின்ற பழைய சீவரம் கோவிலும்

இனி எவ்வாறு இங்கே திருமூர்த்தி சங்கமம் என்பதை பார்ப்போம். இங்கே பெருமாளுக்கு சிவ பெருமானை போல ஜடாமுடியும் நெற்றிகண்ணும் உள்ளன. ஜட முடியை தரிசிக்க கார்திக மாதத்தில் கிரிடத்தை நீக்கி எண்ணை காப்பு சாற்றும் போது பார்க்கலாம், திருநாமாம் எப்போதும் மறைத்திருப்பதால் நெற்றிக்கண் தரிசனம் இயலாதது.
ஆற்றின் நடுப்பகுதியிலிருந்து ஆலயம்

சங்க சக்ர தாரியாக, திருமகள் உறை மார்பனாக இருப்பதால் திருமால். வலது திருக்கையில் பத்மம் வைத்துள்ளதாலும் தாமரை மலர் மேல் நின்றிருப் பதாலும் பிரம்மா. ஆக மும்மூர்த்தி ஸ்வரூபம். 63நாயன்மார்களில் ஒருவரான அப்பர் இந்தப்பெருமாளை பற்றி பாடியுள்ளார் என்பது சிறப்பு.

பார் வேட்டைக்கு பழைய சீவரம் வரும் காஞ்சி வரதர், லக்ஷ்மி நரசிம்மருடன் சேர்ந்து இந்த திருத்தலதிற்கும் வருவது மற்றுமோர் சிறப்பு.


அப்பன் வெங்கடேச பெருமாள்


பழைய சீவரம் வரும் அன்பர்கள் அனைவரும் தவறாது தரிசிக்க வேண்டியதலம் இது.


அப்பன் வெங்கடேசன் திருவடிகளே சரணம்.

Sunday, December 26, 2010

பழைய சீவரம்-ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹர்.

மனித இனத்தின் நாகரீகம் தோன்றியது நதிக்கரைகளில் தான் என்பது வரலாறு. பண்டைய நாகரீக வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே அமைந்தன கோவில்கள். அது போல செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலாற்றின் கரையில் அமந்துள்ளது பழைய சீவரம் கிராமம்.  புராண பெயர்ப்படி ”ஸ்ரீபுரம்”. ஸ்ரீபுரம் காலப்போக்கில் மருவி சீவரம் ஆனாதாக ஒரு கருத்து உண்டு. மிகவும் பழமையான ஊர் ஆதலால் பழைய சீவரம்.


 ஆலய கோபுரம்


பாலாற்றின் கரையிலே ஒரு சிறு குன்று, அந்த குன்றின் மேலே சற்று தூரத்தில் ஒரு அழகிய ஆலயம். ஆலயத்தின் மூல மூர்த்தி “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள்”. இந்த ஆலயம் அமைந்திருக்கும் குன்றின் புராண பெயர் ”பத்மகிரி”யாம். புராண வரலாற்றையே சற்று பார்ப்போம் இப்போது.



ஆலய முகப்பு

நைமிசாரண்யம் என்னும் இடத்தில் பல முனிவர்களும் ரிஷிகளும் கூடி இருக்கும் வேளையிலே ”விஷ்ணுசித்தர்” என்னும் முனிவர் ஒரு கேள்வி எழுப்புகிறார், ஸ்ரீமன் நாராயணனை ”அர்சை” ரூபத்தில் தொழுது முழுமையான பலன் பெற ஏதேனும் ஒரு தலம் உள்ளதா என. இதற்கு பதிலளிக்கும் ”மரீச” முனிவர் அவ்வாறு ஒரு தலம் உள்ளது, அங்கே தொழுபவர்களுக்கு பெருமாள் முழுமையான பலனை தந்த வரலாறும் உள்ளது என சொல்கிறார்.



 கோபுர விமானமும் ஆலய விமானமும்
 அந்த தலம் தான் இந்த பழைய சீவரம். நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில்ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹரை நினைத்து தவம் செய்து கொண்டிருந்த அத்திரி முனிவருக்கும் அவர் மனைவி அனுசுயைக்கும் நெடு நாட்கள் ஆகியும் பெருமான் காட்சி கொடுக்க வில்லை. அதனால் அவர்கள் தங்களது தவத்தை அதிகரித்த வேளயிலே பெருமான் அவர்களுக்கு ஒலித்து ஒரு செய்தி சொல்கின்றான், தென்திசை நோக்கி சென்று பாலாற்றின் கரையிலே அமைந்துள்ள பத்மகிரியில் கிழக்கு நோக்கி அமர்ந்து தவம் செய்தால் தான் காட்சி தருவதாக.

அதன் படியே இங்கே வந்து தவம் செய்த அத்திரி முனிவரின் தவத்தை உகந்த பெருமாள் ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹ ரூபத்தில் மேற்கு நோக்கியவாறு அத்திரி முனிவருக்கு காட்சி அளிக்கிறார். அப்படியே அத்திரி முனிவரின் வேண்டுகோளின் படி அங்கேயே ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹ ரூபத்தில் தங்கிவிடுகிறார் என்கிறது “பிரம்மாண்ட புராணத்தின் 17ம் அத்தியாயம்.

கொடிமரமும் படிகளும்

தூனிலும் துரும்பிலும் என்னிலும் உன்னிலும்

 ஸ்ரீ ல‌க்ஷ்மி நரசிம்ஹ பெருமாள் சுமார் 6 அடியில் ஸ்ரீ மஹலக்ஷ்மியை தன் மடியிலே இருத்திக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பொங்க காட்சி அளிக்கிறான்.  வெகு அழகாக நேர்தியாக பரமரிக்க படும் திருக்கோவில். தனியே அஹோபில வல்லி தாயார் சந்நியும் உன்டு.

 படிகளிலிருந்து ஆலயமும் படிகளும்
 இவ்வாலயத்தில் இருந்து சற்று மேலே சுமார் 100-150 படிகள் ஏறி சென்றால் ஒரு மண்டபம் உள்ளது, அந்த மண்டபத்தில் இருந்து சற்று தொலைவில் மிகவும் பாழடைந்த நிலையில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இந்த பத்மகிரி என்னும் குன்று மூலிகைகள் நிறைந்ததாக கருதப்படுகிறது.
 திருக்குளம் -ஆலயம் -ஆறு


படிகளின் முடிவில் இருந்து வரதர் தங்கும் மண்டபம்

 இந்த பழைய சீவரம் தலத்திற்கு மற்றுமோர் சிறப்பும் உன்டு. ”பேரருளாளன்” என போற்றப்படும் காஞ்சி வரதராஜ பெருமாள் ஆதியில் அத்தி மரத்தால் ஆன மூலவராக அருள்பாலித்து வந்தார். பின்பு கால ஓட்டத்திலோ அல்லது அன்னிய்ர் படையெடுப்பின் போதோ அந்த அத்தி வரதர் சிலை பின்னம் (சேதம்) ஆகியுள்ளது. வேறு சிலை நிறுவ நினைத்த பெரியோர்கள் இந்த பத்மகிரியில் இருந்து தான் தற்போதுள்ள வரதராஜர் சிலையை செய்து காஞ்சி எடுத்து சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றார்கள்.
 இந்த மண்டபத்தில் தான் வரதராஜர் தங்குவார்

தான் பழைய சீவரத்தில் இருந்து வந்த வரலாற்றை நினைவு கூறும் வகையிலே தான் காஞ்சி வரதர் ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வோர் வருடமும் மாட்டு பொங்கல் தினத்தன்று “பார் வேட்டை” அல்லது பரிவேட்டைக்கு இந்த ஊரில் வந்து தங்குவார். பார் வேட்டை என்பது ”துஷ்ட நிக்ரஹம்” எனப்படும் தீமை ஒழிப்பை நினைவூட்டுவதாகும்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்


இந்த தலத்தின் அருகிலேயே ஆற்றின் மறு கரையில் “திரு முக்கூடல்”என்னும் தலமும் “அப்பன் வேங்கடேச பெருமாள்” கோவிலும் உள்ளன.இதுவும் மிகவும் முக்கியமான திருக்கோவில்.

தேடல் தொடரும்........

குறிப்பு:- அர்சை என்பது ஸ்ரீமன் நாராயனன் சிலை வடிவில் பூலோகத்தில் காட்சி அளித்து அருள்வது.

Sunday, December 19, 2010

மண் ஆசை தீர்க்கும் மண்ணீஸ்வரர்

 தலை வாசலில் இருந்து ஈசன் சந்நிதி
 வானளாவிய கொடிமரம்
 மரகதாம்பிகை சந்நிதி

 வாயில் நோக்கி பார்த்தவாறு நந்தியெம்பெருமான்

அரச மரம்
 தட்சிணாமூர்த்தி
 மகாவிஷ்ணு
கடன் பினி அகற்றும் கால பைரவர்.


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து M55 பேருந்து மூலமாக கோவிலை அடையலாம். இறங்கும் இடம் மண்ணிவாக்கம்.மேலும் விவரங்கள் பிறகு எழுதப்படும்.

Wednesday, November 17, 2010

ஒளஷதகிரி:ஆப்பூர்:வெங்கடேச பெருமாள்

ஆப்பூர், சென்னை சிங்கபெருமாள் கோவில்- ஒரகடம் இடையே திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஒரு எளிய கிராமம், அந்த கிராமத்தின் அருகே ஒரு சிறிய மலை, அந்த மலை மேலே ஒரு சிறிய கோவில், அந்த கோவிலின் உள்ளே ஒரு சிறிய பெருமாள். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பது பழமொழி. அந்த பழமொழி உன்மை என்பதை உனர இந்த கோவிலில் வந்து பெருமாளை வழிபட்டு செல்ல வேண்டும். பெருமாள் குடி இருக்கும் மலைக்கு பெயர் ”ஒளஷத கிரி”(மூலிகை மலை). பல் வேறு மூலிகைகள் நிறைந்த மலை என சொல்லபடுகிறது.பெருமாள் பெயர்
“நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்”
 மலையும் அதன் மேல் கோவிலும்

 படிகள்
ராம ராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர், அந்த அஸ்திர தாக்குதலில் அகப்படாமல் தப்பித்த ஒரு சிலரில் முக்கியமானவர் ஆஞ்சனேயர். அவர் ஜாம்பவானின் அறிவுறைப்படி இலங்கையில் இருந்து கடலை தாண்டி இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து நான்கு வகையான மூலிகைகளை எடுக்க செல்கிறார் மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க.

இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரனத்தால் ஹனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறான்.
 தற்போதைய படிகள்

முன் காலத்தைய படிகள் முழுவதும் இப்படி தான் இருந்தனவாம்

 அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மற்றும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதி தான் இங்கு மூலிகை மலையாக இருப்பதாக சொல்கிறார்கள். அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூர்(ஆப்பூரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது)  பகுதியில் விழுந்ததாம்.
 மலை மேல் இருந்து Palace gardens Construction

சுற்று பிரகாரம்

 முதன்முதலில் இந்த கோவிலுக்கு நான் சென்றது 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம். அதன் பிறகு 4 முறை சென்று வந்துவிட்டேன், இந்த ஆண்டிலேயே 3 முறை. சமீபத்தில் சென்ற ஞாயிறு(14/11/2010) சென்று தரிசித்து வந்தோம்.
அதற்கு சில ஆண்டுகள் முன்னதாகவே இந்த கோவிலை பற்றி பல நன்பர்கள் மூலம் கேள்வி பட்டிருந்தாலும் சென்று தரிசிக்க நேரம் வாய்க்கவில்லை. 2009 பிப்ரவரியில் தான் தம்பி கண்ணன் தூண்டுதலில் தான் முதல் முறை சென்று தரிசித்தோம்.
மண்டபமும் மலை மேல் இருந்து இயற்கை எழிலும்


பெரிய திருவடியும் சந்நிதியும்

 சுமார் 500 படிகள் ஏறி மலை உச்சியை அடைய வேண்டும். மலையில் ஏறியவுடன் நம்மை முதலில் வரவேற்ப்பது சிறிய திருவடி என போற்றப்படும் ஹனுமனின் வழித்தோன்றல்கள். இவை இந்த மலையை விட்டு அகலுவதில்லை. இந்த மலையிலேயே வசித்து கொண்டு வரும் பக்தர்கள் தரும் உனவை மட்டுமே உண்டு வாழ்வதாக சொல்கிறார்கள். முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பு பின்னர் நேரே சென்றால் இறைவன் சந்நிதி.

தசாவதார காட்சிகள்



அஷ்ட லஷ்மிகள் இடையே திரு வேங்கடவன்

 பெரிய திருவடியின் ஒரு சிறிய சிலை பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. அந்த மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள், மற்றும் அஷ்ட ல‌ஷ்மிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம்.  பெருமாள் சந்நிதி, பெருமள் இங்கே பார்பதற்கு திருவேங்கடவனின் சிறிய வடிவு போல காட்சி அளிக்கிறார். முன்பே சொன்னது போல பெருமாள் மூர்த்தி சிறிது தான், ஆனால் பெருமானின் ஆற்றலை உனர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து தேடி வருகின்றனர்.

பக்தர்களுடன் விளையாடும் குரங்குகள்


இங்கே தனியாக தாயார் சந்நிதி கிடையாது.பட்டரின் கூற்றுபடி பெருமாள் லஷ்மி சொருபமாகவே இருப்பதால் அவருக்கு சாற்றப்படும் வஸ்திரம் புடவையே. வேறு வஸ்திரங்கள் சாற்றபடுவதில்லை.தாயாரும் பெருமாளும்
இனைந்து ஒரேவடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை, அதனால் தான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேச பெருமாள்”.

பிண்ணபடுத்த பட்ட சிலைகள்

 500படிகளையும் ஒரே மூச்சாக ஏறுவது இயலாதது, சில படிகள் ஏறி கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு மூலிகை காற்றை சுவாசிது பின்னர் படிப்படியாக ஏறினால் சிரமம் தெரியாமல் இருக்கும்.சித்தர்கள் பெளர்னமி இரவுகளில் வந்து இங்கே வழிபாடுவதாக நம்பிக்கை. பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் சாட்சியம் சொல்கிறார்கள். நான் ஒவ்வோர் முறை செல்லும் போதும் தொலை தூரங்களில் இருந்து பல பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து அவர் பெருமைகளை எடுத்துரைப்பார்கள்.
மலை அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம்

 பெருமாளால் நன்மை பெற்ற பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு பல்வேறு கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர். உதாரனமாக நான் கடந்த முறை சென்ற போது சந்தித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பக்தர் அவர் சுமார் 8-9
ஆண்டுகளாக இங்கே வருவதாகவும் அப்போதெல்லம் மலை மேல் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவரும் இன்னும் சில பக்த்தர்களும் சேர்ந்து நடை பாதை அமைக்க முயற்சி எடுத்து பல்வேறு கால
கட்டங்களில் படிப்படியாக படி அமைத்ததை சொன்னார்.
நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்

இந்த முறை சென்னை சைதாப்பேட்டையை இரு பக்தர்கள் தாங்கள் எப்படியும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தவறாது வருவதாக கூறினார்கள். இன்னொரு பக்தர் தான் வேண்டியதை பெருமாள் நிறை வேற்றியாதால் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். ஒரு புது மண தம்பதிகள் தங்கள் பிராத்தனையை நிறைவேற்ற வந்திருந்தனர்.நாடி ஜோதிடத்தில் கூட இந்த கோவிலில் பரிகரம் பரிந்துரைக்க படுவதாக தகவல் உண்டு.கோவிலை பற்றிய சரித்திர ஆதாரமோ அல்லது புராண வரலாறோ யாருக்கும் சரியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

பெருமாளின் பெருமைகளை சொற்களால் முழுவதும் சொல்வதென்பது இயலாது, அனைவரும் ஆப்பூர் சென்று பெருமானை தரிசித்து வழிபட்டு பயன் பெற வேண்டும்.  கோவிலுக்கு செல்பவர்கள் அங்கே வாழும் குரங்குகளுக்கும் ஏதேனும் உணவு எடுத்து செல்வது நல்லது. தமக்கும் அவர்கள் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது, ஏனெனில் 500 படிகள் ஏறும்போது களைப்படைவது நிச்சயம். நினைக்கும் அனைவருக்கும் நிச்சயம் அருள்வான் நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேசன்.


குறிப்பு:- கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் அவர்களை தொடர்பு கொள்ள செல்பேசி என் 9444142239.

பதிவில் உள்ள படங்கள் பல் வேறு கால கட்டங்களில் எடுக்க பட்டன.