Monday, January 3, 2011

திருமயிலை சப்த(ஏழு) சிவாலயங்கள்

கயிலையே மயிலை மயிலையே கயிலை ஏன்?


”தருமம் மிகு சென்னை” என அருட்பிரகாச ராமலிங்க வள்ளலாரால் பாடப்பெற்ற புண்ணியம் வாய்ந்த சென்னையின் முக்கியம் வாய்ந்த இடம் திருமயிலை என போற்றப்படும் மயிலாப்பூர். பழங்காலத்தில் மயில்கள் நிறைய வசித்து ஆர்பரித்து கொண்டிருந்த ஊர் ஆகையால் மயிலாப்பூர் (மயில்+ஆர்ப்பு+ஊர்).

”மட்டிட்ட புன்னையின் கானல் மடமயிலை” என்று திருஞான சம்பந்தராலும் ”மாட மாமயிலை திருவல்லிக்கேனி கண்டேனே” என திருமங்கை ஆழ்வாராலும் படப் பெற்றுள்ளதால் இத் தலம் பல நூற்றாண்டுகள் முன்பாகவே புகழ்பெற்ற தலமாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார், 12 ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் ஆகியோர் அவதரித்த தலமாகும். இவ்வளவு ஏன் உலகப்பொது மறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் கூட இங்கே தான் பிறந்ததாக சொல்வோரும் உண்டு.

திருமயிலையின் பெருமைகளை ஒரு நாள் முழுதும் எடுத்துறைக்கலாம் அத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த ஊர் இத்திருமயிலை. இப்போது நாம் கான இருப்பது தனி சிறப்புகள் பல கொண்ட மயிலையின் ஒன்றான ஏழு சிவாலயங்கள். இந்த ஏழு சிவாலயங்களை தனித்தணியாக ஒவ்வோர் நாள் தரிசிப்பதை விட ஒரே நாளில் ஏழு ஆலயங்களையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய தரிசனம் கயிலை யத்திரைக்கு சமம் என பெரியோர்கள் நம்பிக்கை. ஆதலால் மயிலையே கயிலை கயிலையே மயிலை.
 சப்த சிவாலயங்களுக்கும் செல்லும் வழி வரைப்படம்

தீர்தபாலீஸ்வரர் கோவில்

கால மாற்றத்தினால் இன்றைய கால கட்டத்தில் மேதை நடேசன் சாலை, கிருஷ்ணாம்பேட்டை,திருவல்லிக்கேனி பகுதியில் இருந்தாலும், திரிபுரசுந்தரி உடனுறை தீர்தபாலீஸ்வரர் கோவில் திருமயிலையிலேயே இருந்தது முன் காலத்தில். இந்த கோவிலை சுற்றி 64 தீர்த்த குளங்கள் இருந்தனவாம் அக்காலத்தில், மிகப்பெரிய தீர்த்தமாக வங்க கடலும் கோவிலுக்கு சற்று தொலைவிலேயே இருப்பதால் தீர்த்தங்களை பாரிபாலனம் செய்யும் ஈஸ்வரர்= தீர்த்தபாலீஸ்வரர். சூரியனை நோக்கி நீர் விடுவதான ”அர்கியம்” இங்கு முன் காலத்தில் முனிவர்களாலும் சித்தர்களாலும் செய்யப்பட்டதாக நம்பிக்கை. சிறிய கோவில் தான் ஆனால் மிகவும் பழமையானது அமைந்திருக்கும்சுற்றுபுறத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே அமைதி தவழ்கிறது. திருபுரசுந்தரி அம்மன் பெயருக்கு ஏற்றவாரே அருளும் அழகும் பொங்க காட்சி அளிக்கிறார். நீர் சார்ந்த உணவுகளான பாயசம், பானகம் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைத்து வழிபட்டு எல்லோருக்கும் பகிர்ந்தால் நலம் பல பெறலாம்.

தீர்த்தபாலிஸ்வரர் கோவில் முகப்பும் சன்னிதியும்  

விருப்பாக்ஷீஸ்வரர் கோவில்


”வேண்டும் வரம் அளிக்கும் விருபாக்ஷீஸ்வரர்” என பாபநாசம் சிவன் அவர்களால் பாடப்பெற்றவர் இந்த ஈஸ்வரர். விருப்பங்களை தன் கண் பார்வையலேயெ தீர்த்து வைக்கும் ஈஸ்வரர் ஆகையால் விருப்பாக்ஷீஸ்வரர். அம்மன் விசாலாக்க்ஷி. அக்ஷம் அன்பது கண் என பொருள், அப்பனும் அம்மையும் தங்கள் கண் பார்வையாலேயே எல்லா துயர்களையும் தீர்ப்பவர்கள். என் கருத்துப்படி இந்த ஏழு சிவாலயங்களில் மிகவும் பழமையானதாக காணப்படுவது இந்த கோவில் தான். பெரிய ஆவுடையாரில் அமைந்த பெரிய லிங்க திருமேனி. கோவில் அக்கிரமிப்பாளர்களிடம் அகப்பட்டு சற்றே மோசமான நிலையில் கானப்படுகிறது. ஏதோ கட்டுமானப்பனிகள் வேறு நடைபெற்று வருகிறன. விவரங்கள் தெரியவரும்போது மேலும் எழுதுகிறேன்.

விருப்பாக்ஷீஸ்வரர் கோவில் 



மல்லீஸ்வரர் கோவில்


முன் காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் மல்லீஸ்வரர் என்பது அர்ச்சகர் சொன்ன செய்தி. மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர். மல்லிகையின் வாசம் போல பக்த்தர்கள் மனதில் பரவசம் ஏற்படுத்தும் ஈஸ்வரர். நமது
மனமாகிய மலரை நற்சிந்தனையோடு இறைவன் திருவடியில் சமர்பித்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள்பல. அது அகவழிபாடு. புறவழிபாடாக மனம் மிகுந்த மலர்களையும் உணவு வகைகளையும் தாமரை இலையில் படைத்து வழிபட்டு பகிர்வது இந்த கோவிலில் சிறப்பு.


மல்லீஸ்வரர் சந்நிதானமும்  கோபுரமும்


காரணீஸ்வரர் கோவில்


ஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்க பட்ட பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர், எளிதிலேயே பொருள் விளங்குஙிறது, எல்லாவற்றுகும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் விஷய்த்திற்கும் ஓர் காரணம் உண்டல்லவா? அத்தனை காரணத்திர்கும் இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பினி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம்
வந்து வழி படுதல் நலம்.


காரநணீஸ்வரர் கோபுரமும் கொடி மரமும்


காரணீஸ்வரர் கோவில் உள்ளிருந்து



வாலீஸ்வரர் கோவில்

பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம் தெரியாத படி அக்கிரமிப்பாளர்களால் மறைக்கபட்டிருக்கும் முக்கியமான திருத்தலம். புராண கதைகளின் படி வாலி மிகவும் பலம் வாய்ந்த வானரன். தன்னை எதிர்பவர்களின் பலத்தின் பாதியை தனக்கிகொள்ள வரம் பெற்றவன், அத்தகைய வாலி தனது ஆன்ம பலத்திற்காக இறைவனை வழிபட்ட தலம் இது. இறைவன் சந்நிதியிலே கைகூப்பி வனங்கியபடி வாலி இருக்கிறார். வாலி வழிபட்டதாக சொல்லப்படும் தலங்கள் எல்லாம் ஹனுமான் தனது சாபம் நீங்க வழிபட்ட இடங்களே என்ற கருத்தும் உள்ளது. இங்கே அமைந்துள்ள பஞ்ச லிங்கங்கள் சந்நிது விஷேசமானது, சித்தர் ஒருவரின் ஜீவ சமாதியின் மேலே இந்த பஞ்ச லிங்க சந்நிதி அமைந்துள்ளதாக தகவல். உடல், மன பலம் பெற இத்தலம் வந்து வழிபட சிறந்தது.


வாலீஸ்வரர் கோவில்

வெள்ளீஸ்வரர் கோவில்


வெள்ளி= நவ கிரகங்களில் ஒருவரான அசுர குரு சுக்கிராசாரியார்.

அசுர குருவான சுக்கிரன் வாமனரால் பரிபோன தன் ஒரு கண் பார்வையை திரும்ப பெற இறைவனை வழிபட்ட தலம். சுக்கிராச்சாரியார் வனங்கி வழிபடும் வகையில் இருக்கும் இலிங்க திருமேனியை இன்றுன் இங்கே காணலாம். காமாக்ஷி அம்மன், சைவ வைணவ சண்டையால் உருவாக்க பட்ட சரபேஸ்வரரின் புதிதாக அமைக்கப்பட்ட சந்நிதி ஆகியவையும் இங்கே உண்டு. கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க இங்கே வழிபடலாம். சித்திரக்குளம் என அழைக்கப்படும் குளம் ஆதியில் சுக்கிரக்குளம் என ஒரு தகவல் உண்டு. கண் த்ரிஷ்ட்டி நீங்க இந்த பெருமானை வழிபட வேண்டியது அவசியம்.


வெள்ளீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவில்


இந்த கோவிலின் பெருமைகளை சுருக்கமாக சொல்ல இயலாது ஆதலால் பிறகு ஒரு தனி பதிவு இந்த கோவிலை பற்றி எழுதுவேன். நினைப்பதெல்லம் தரும் கற்பக விருட்ச்சம் போல வரங்களை அள்ளி தரும் கற்பகாம்பாள், நர்த்தன வினாயகர்,சிங்கார வேலர், சந்நிதிகளுடன், பெரிய அழகிய திருகுளத்துடன் அழகிய பெரிய கோவில். இந்த கோவிலின் பிரசாதம் மிகவும் ருசியானது. மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்.
கபாலீஸ்வரர் கோவில் உள்ளே



அனைத்து கோவில்களுக்கும் சென்று தரிசித்து வழிபட்டு சிவன் அருள் பெறுக.


குறிப்பு:-

படங்களை கிளிக் செய்தால் பெரிய அளவில் பார்கலாம்